காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Monday, July 14, 2008

இமயப்பூவே இந்திரா !

இவ்விரங்கற்பா இந்தியத் துணைக்கண்டத்தின் அன்றைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி மறைந்த போது, எழுதப்பட்டு, அகில இந்திய வானொலியில், சிறுவர் சோலையில் திரு. சீனா @ சிதம்பரம் அவர்களின் செல்ல மகளால் படிக்கப் பட்டது.
-------------------------------------------------
இமயப்பூவே இந்திரா !

இந்திய வரலாறு இந்திரா இல்லாமலா ?
எண்ணிப் பாரா இமயப்பூவே ! இந்திரா !
உன்னைப் பாரா இந்தியா ! இந்தியாவா ?
இத்தனை அமைதி ! இத்தனை அமைதி !
எங்கே உறங்குகின்றாய் ?

செந்நீர்ப் பெருக்கினை காணிக்கை ஆக்கினாய் !
ஏனெங்கள் கண்ணீர்ப் பூக்களைக் காணவா ?
நீ தீட்டாத திட்டமில்லை ! தீர்க்காத சிக்கலில்லை !
விதிக்காத சட்டமில்லை ! விலக்காத நீதியில்லை !
நின் நிகழ் காலத் திட்டங்கள் நிலையாய் உள்ளன !
அரசியல் வரலாற்றில் நீயொரு பொன்னேடு !
நின் பொன்னேட்டின் பக்கங்கள் புகழாரம் சூடும் !

இனம் வேறு ! மொழி வேறு ! மதம் வேறு !
என்று வேறுபட்ட பாரதத்தை ஒன்றாக்கினாய் !
மிக நன்றாக்கினாய் ! உலக ஒற்றுமைக்கு
குரல் கொடுத்தாய் ! வேற்றுமைக்கு கையசைத்தாய் !

மூன்றாம் உலகப் போரினை முறியடித்தாய் !
நடுவு நிலைமை நாடுகளை உருவாக்கினாய் !
கூட்டுச் சேராக் கொள்கையிலே குரல்கொடுத்தாய் !
அணுவால் அழியும் அகிலத்தைக் காத்தாய் !

அத்தனையும் போதா தென்றாநீ ! துப்பாக்கிச்
சத்தத்தில் சிக்கி தீப்பொறி ஆனாய் !
அரண்மனைத் தோட்டத்து ரோஜாவே !
நின்றன் காஷ்மீரக் கதிர்ப் பூக்கள்
காலமெலாம் கதைபேசும்.

எத்தனையோ திட்டங்கள்
இதயத்தில் ஏந்தினாய்
என்றா ! இத்தனை
குண்டுகள் துளைத்தன !
இந்தஇதயமிலா மனிதரை
ஏனோநீ காணவில்லை !

ஏற்றமிகு தோற்றத்தால் !
எடுப்பான சொல்லால் !
போற்றுகின்ற பண்பால் !
பொலிவான உடையால் !
புன்னகைப் பூக்களை !
பூக்கும் நீ !
அதிகாரம் ஆதிக்கம் செய்யும் போதே !
அங்கங்கே சிதறும் செந்நிறத் துளிகள் !
இங்கேயும் சிதறும் என்பதை மறந்தாயே !

எத்தனை இந்திரா உன்னால் இங்கே !
இனியெங்கே ஜவகரின் இந்திரா இங்கே !
கவிக்குலத்து மேதைநீ !
காவியத்தின் சீதைநீ !
காரிகையாய் வந்ததொரு கீதைநீ !

இனியும் இதயங்கள் வெடிப்பதால்
இந்திராவின் இந்தியா வடிக்கப் படுவதில்லை !
கலங்காத நெஞ்சம், எங்கும்
காற்றாக இயங்கும் என்றா ?
காவலனே கலைத்தான்
நின்னுயிர்க் கூட்டை !
கூடுதான் கலைந்தது !
கொள்கைகள் நிலைக்கும் !
இனிவரும் இந்தியா
நின்பூக்களைச் சூடும் !

கதறாத நின்னைக் கதற வைத்தார் !
காவலரா அவர் ? இல்லை ! இல்லை !
காரிகைநீ சிந்திய ரத்தம் ஒவ்வொரு
துளியும் நின் புகழ் பேசும் !
ஒற்றுமைப் பூக்களே இந்தியா !
இல்லை ! இல்லை ! இந்திரா !
==================================
ஒலி வடிவத்தினைக் கேட்க :





இங்கு இதை பிரசுரிக்க அனுமதி தந்த திரு.சீனா ஐயா மற்றும் திருமதி. செல்வி அம்மா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.

0 comments: