காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Showing posts with label பணவீக்கம். Show all posts
Showing posts with label பணவீக்கம். Show all posts

Saturday, June 28, 2008

விலையேற்றம் - யார்க் காரணம்?

பணவிக்கம் என்ற சொல்லை வைத்துக் கொண்டு பாஜகவும் காம்ரேடுகளும் போடும் ஆட்டம் தாங்கலை. பணவீக்க உயர்வுக்கு என்ன காரணம் என்பதை மிகத் தெளிவாக புரிந்துக் கொண்டும் வேண்டுமென்றே இதை அரசியலாக்குகின்றனர். பணவீக்க உயர்வுக்கு பொறுபேற்று பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜகவும் நிதி அமைச்சர் சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று காம்ரேடுகளும் சொல்கிறார்கள்.

உண்மையில் இவர்கள் இருவரும் பதவி விலகினால் விலையேற்றம் குறைந்துவிடுமா?. நிச்சயம் குறையாது. ஏனெனில் விலையேற்றத்திற்கு இந்தியாவில் நடக்கும் செயல்கள் காரணமல்ல. இந்த விலையேற்றம் சர்வதேசக் காரணிகளை சார்ந்தது.

கடந்த அக்டோபர் 13, 2007 அன்று பணவீக்கம் 3.07 சதவீத அளவுக்கு இருந்தது. டிசம்பர் 1,2007 அன்று கூட 3.89 சதவீதமாகத் தான் இருந்தது. அப்போது வேறு பிரதமரும் வேறு நிதி அமைச்சரும் இருந்தார்களா?. அதுவரையில் நன்றாக செயல்பட்டவர்கள் இந்த 6 மாதங்களில் செயல்படாமல் போய்விட்டார்களா?. அவர்களின் செய்ல்பாடு அதே போல் சிறப்பாகத் தொடந்துகொண்டுதான் இருக்கிறது.

பிறகு ஏன் இந்த விலையேற்றாம்?..
ஒரு பேரல் கச்சா எண்ணெய் சுமார் 40 டாலரிலிருந்து இன்று 140 டாலரில் வந்து நிற்கிறது. இன்னும் சில நாட்களில் 150 டாலர்களை தாண்டும் என எதிர்பார்க்கப் படுகிறது. எனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றம் தவிர்க்க இயலாமல் போய்விட்டது. இதனால் அத்தியாவசியப் பொருட்களை வினியோகிப்பதற்கான போக்குவரத்து செலவுகளும் இன்ன பிற மூலப் பொருகளின் விலையும் உயர்ந்துவிட்டதால் விலையேற்றமும் தவிர்க்க இயலாதது தான். மேலும் பல நாடுகளும் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்து வருகிறது. பிரேசில் போன்ற நாடுகள் எத்தனாலை எரிபொருளாக உபயோகிக்க ஆரம்பித்துவிட்டதால் கிட்டத் தட்ட வளைகுடா நாடுகளை மறந்தே விட்டது என்று சொல்லலாம். இதனால் எண்ணெய்வள நாடுகள் இப்போதே கொள்ளை லாபம் பார்க்க விரும்புகின்றன. இதனால் கச்சா எண்ணெய் விலை குறைய தற்போதைக்கு வாய்ப்பே இல்லை.

இன்னொரு முக்கியக் காரணம்.. உலக அளவில் உணவு உற்பத்தி குறைந்து வருகிறது. அமெரிக்கா தனது விளை நிலங்களை பயோ டீசல் உற்பத்திக்கு பயன்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் விவசாயம் முக்கியத்துவம் இழந்துவிட்டது. அநேகமாக எல்லா விவசாயிகளின் பிள்ளைகளும் வேலை மற்றும் வியாபாரத்திற்கு நகரங்களுக்கு வந்துவிட்டோம். நகரத்தில் நன்கு சம்பாதித்து பெற்றோருக்கு தருவதால் அவர்களும் விவசாயம் பார்த்து உழைத்து கஷ்டப் பட தயாரில்லை. நகர எல்லையை ஒட்டி இருக்கும் விவசாய நிலங்களின் நிலையை பற்றி நான் எதும் சொல்லத் தேவை இல்லை. அவை எல்லாம் அடுக்குமாடி குடி இருப்புகளாகவும் பன்னாட்டு நிறுவனங்களாகவும் மாறிவிட்டன.

கடந்த நான்கு ஆண்டுகளாக உள்நாட்டு உற்பத்தி 9 சதவீதமாக வளர்ந்துக் கொண்டிருக்கிறது. உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதனால் வறுமைக் கோட்டுக்கு கீழ வாழ்பவர்களின் எண்ணிக்கை குறந்துவிட்டது. எனவே உணவுப் பொருட்கள் தேவை உயர்ந்துவிட்டது. தேவை உயர்ந்தாலும் உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே போகிறது. மேலும் மக்கள் தொகையும் வருடத்திற்கு சுமார் 1.7 சதவீத அளவு உயர்ந்துகொண்டே போகிறது.

எனவே விலைவாசி உயர்வுக்கு இவ்வளவு காரணங்கள் இருக்கும் போது பிரதமரும் நிதி அமைச்சரும் என்ன செய்ய முடியும்? நிதி அமைச்சர் சிதம்பரம் கேட்ட மாதிரி இதை சமாளிக்க சரியான ஆலோசனை சொல்ல யாராலும் முடியவில்லை. வாய் கிழிய குறை மட்டும் சொல்கிறார்கள்.

பாஜக ஆட்சியில் இருக்கும் போது இது போன்ற பெரிய பிரச்சனைகள் எதும் இல்லாமலே பிப்ரவரி 10, 2001ல் விலையேற்றம் 8.77 சதவீதமாக இருந்தது. ( 1998 மார்ச் முதல் 2004 மே வரை பிஜேபி ஆட்சி). அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?. பிஜேபி ஆட்சியில் இருந்து இறங்கிய இரண்டு மாதத்தில் ஜூலை 31, 2004ல் பணவீக்கம் 8.02. பாஜகவின் செயல்பாடு இந்த லட்சனத்தில் தான் இருந்தது. இவர்கள் இப்போது கொஞ்சமும் கூச்சப்படாமல் கங்கிரஸ் ஆட்சியை குறை கூறுகிறார்கள்.

காங்கிரஸ் ஆட்சி பொறுபேற்ற பின் விலையேற்றம் வெகுவாக குறைந்தது. டிசம்பர் 2007ல் 3.89 சதவீதமாகவும் ஜனவரி 2008ல் கூட 4.26 சதவீதமாகத் தான் இருந்தது. பிறகு அநியாயத்திற்கு உயர்ந்த கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் தான் அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றமும் உயர்ந்தது. இதெல்லாம் தெரிந்தும் மூடத் தனமாக பிஜேபியும் கம்யூனிஸ்டுகளும் செயல்படுகிறார்கள்.

பிரதமரும் நிதியமைச்சரும் ,
  • என்ன செய்தால் அமெரிக்கா தன் விளைநிலங்களை மாற்று எரிபொருளுக்கு பயன்படுத்துவதை நிறுத்தும்?
  • என்ன செய்தால் எண்ணெய்வள நாடுகள் கொள்ளை அடிப்பதை நிறுத்தும்?
  • என்ன செய்தால் நாம் மீண்டும் விவசாயத்திற்கு முன்னுரிமை தருவோம்?
  • என்ன செய்தால் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்க்கும் விவசாயிகளின் பிள்ளைகள் வந்து விவசாயம் செய்வார்கள்?
எங்கள் ஊரில் இப்போது விவசாயம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் 40 வயதைக் கடந்தவர்கள். இவர்களின் பிள்ளைகள் அனைவரும் தனியார் பள்ளிகளிலும், வங்கி கடன் உதவியுடன் பொறியியல் கல்லூரிகளிலும் தான் படிக்கிறார்கள். இவர்கள் படித்துவிட்டு விவசாயமா பார்க்கப் போகிறார்கள்?. ஆகவே இன்னும் 20 ஆண்டுகளில் மிகப் பெரும் உணவுப் பஞ்சம் வரும். அப்போது விலைவாசி உயர்வு ஜிம்பாப்வே போன்று 200 சதவீதத்தை தண்டலாம்.
இதை தடுக்க என்ன செய்யலாம்? தெரிந்தவர்கள் ஆலோசனை சொல்லுங்க.

இப்போது அரசு எடுத்திருக்கும் சில நடவடிக்கைகளால் அடுத்த ஆண்டு இதே சமயத்தில் பணவீக்கம் 5 முதல் 6 சதவீதமாக இருக்கும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் விர்மானி சொல்லி இருக்கிறார். (எக்காமிக்ஸ் டைம்ஸ் : 28.06.2008)

உலக அளவில் விலையேற்றம் :
துருக்கி - 10.4 - மே 2008
வெனிசுகா - 29.3 - ஏப்ரல் 08
சவூதி அரேபியா - 10.5 - ஏப்ரல் 08
சீனா - 8.5 - ஏப்ரல் 08
ரஷ்யா - 15.1 - மே 08
இந்தோனேஷியா - 10.4 - மே 08
பாகிஸ்தான் - 19.3 - மே 08
சிங்கப்பூர் - 7.5 - ஏப்ரல் 08
தாய்லாந்து - 7.6 - மே 08
அர்ஜெண்டினா - 8.9 - ஏப்ரல் 08
தெ. ஆப்பிரிக்கா - 11.1 - ஏப்ரல் 08
இந்தியா - 7.57 - ஏப்ரல் 08, 8.75 - மே 08

... ஆகவே விலையேற்றம் என்பது இந்தியாவில் மட்டும் இல்லை. சர்வதேச அளவில் இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் கச்சா எண்ணெய் விலை உயர்வுதான். அந்த நாடுகளின் மோசமான செயல்பாடு அல்ல.

பிஜேபியும் கம்யூனிஸ்டுகளும் இதை அரசியாலாக்கக் காரணம் :
  • மீண்டும் ஆட்சிக்கு வர இதை விட்டால் பிஜேபிக்கு மத்திய அரசை குறை சொல்ல வேறு காரணங்கள் இல்லை. தங்கள் ஆட்சியில் இருந்த குறைகளை மக்கள் மறந்து மீண்டும் தங்களை வெற்றிபெற செய்வார்கள் என்ற நப்பாசை. வாஜ்பாயி இல்லாத பிஜேபி பெரிதாக சோபிக்க வாய்ப்பே இல்லை. இன்றைய சூழலில் கூட்டணி தான் வெற்றிக்கு வழி என்ற நிலையில் வாஜ்பாயி தவிர வெறொருவரால் அதுவும் குறிப்பாக அத்வானி போன்ற அடாவடிப் பேர்வழிகளால் கூட்டணியை உறுவாக்க முடியவே முடியாது. அப்படியே கூட்டணி உறுவாக்கினாலும் அதை சில வாரங்களுக்கு கூட அதவானியால் சமாளிக்க முடியாது. அவர்கள் கட்சியிலேயே சமயம் பார்த்து காத்துக் கொண்டிருக்கும் முரளிமனோகர் ஜோஷி , ராஜ்நாத் சிங் போன்றவர்களை கூட அத்வானியால் சமாளிக்க முடியாது. எனவே பணவீக்கத்தை அரசியலாக்கி மக்களை திசை திருப்புகிறார்கள்.
  • கம்யூனிஸ்டுகளை பொறுத்தவரையில் அவர்கள் தேசிய பாமக என்று சொல்லலாம். காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வர காரணம் தேடிகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிர்ஷ்டவசமாக கிடைத்த இடங்கள் எல்லாம் நந்திகிராம் பிரச்சனையாலும், கேரளாவில் பாடப் புத்தகங்களை திருத்திய பிரச்சனையாலும் திரும்ப கிடைக்க வாய்ப்பே இல்லை என்று அவர்களுக்கு தெரியும். ஆகவே தாங்கள் மக்களுக்காக போராடுபவர்கள் என்ற தங்களின் போலி பிரச்சாரத்தை தக்க வைத்துக் கொள்ளவே விலையேற்றத்தை அரசியலாக்குகிறார்கள்.
.. எனவே பிரதமரும் நிதியமைச்சரும் பதவி விலக வேண்டும் என்று கோருவது சுத்த அபத்தம்...